ஞாயிறு, 18 டிசம்பர், 2011

DTCP அப்ரூவல் என்றால் என்ன? நிலம் வாங்கப் போறீங்களா


நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல் (Conversion), அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்பு இயக்கம் (Directorate of Town and Country Planning - DTCP) அனுமதி தேவைப்படும். இது சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) அங்கீகாரத்திலிருந்து வேறுபடுகிறது. சி.எம்.டி.ஏ. (CDMA) உடைய அதிகார வரம்பு என்பது சென்னை மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகள் வரை வரும்.

டீ.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகள் வரை நீடிக்கிறது. எனவே டீ.டி.சி.பி. அப்ரூவலுக்கு இங்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது. அதிலும், லே-அவுட் நிலங்களுக்கு டீ.டி.சி.பி. அனுமதியே மிக மிக முக்கியமானது. அப்ரூவல் வாங்க வேண்டிய பகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந்த நிலம் எந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின் டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை. இது தவிர, லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள டீ.டி.சி.பி. தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.


இதில் லே-அவுட் ஒரு கிராமப் பகுதியில் இருந்தால், அந்தக் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று அவர்களிடம் நமது லே-அவுட் பிளானை சமர்பிக்க வேண்டும். அவர்கள் அதை சரிபார்த்து விட்டு, மாவட்ட டீ.டி.சி.பி. அலுவலகத்துக்கு அந்த பிளானை அனுப்பி வைப்பார்கள். டீ.டி.சி.பி. அதிகாரிகள், லே-அவுட் பிளானை பல்வேறு கட்டங்களில் ஆராய்ந்த பிறகு அதற்கு அனுமதி கொடுப்பார்கள். சில சமயங்களில் அவர்களே ஒரு பிளானையும் தயாரித்துக் கொடுக்கலாம்.


அதில் அவர்கள் சாலை, பூங்கா, பொது இடம் என்று பிரித்து இருப்பார்கள். அதைத்தான் லே-அவுட் புரமோட்டர் அல்லது உரிமையாளர் பின்பற்ற வேண்டும். பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், அதில் வேறு எந்த மாற்றமும் செய்யக் கூடாது. அந்த பிளானில் உள்ள படியே பிளாட் (Plot) களை விற்கவோ விளம்பரம் செய்யவோ வேண்டும்.


24 செண்டுக்கு குறைவான நிலப்பகுதிக்கு கிராமப் பஞ்சாயத்தின் அனுமதியே போதுமானது (1 செண்ட்=435.6 சதுர அடிகள்). அந்த 24 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியை தனியாக வாங்கவோ அதில் கட்டடம் கட்டவோ பஞ்சாயத்து அனுமதி தேவைப்படும். அந்த 24 செண்ட் அளவுக்கு மேற்பட்ட நிலப்பகுதிக்கு லே-அவுட் அப்ரூவல் மட்டுமல்லாது, வேறு எந்த விதமான திட்டங்களுக்கும் அனுமதி வழங்க கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே கிடையாது. அவை அனைத்துமே டீ.டி.சி.பி. உடைய கட்டுப் பாட்டின் கீழ் வரும். எனவே, பஞ்சாயத்து அனுமதியை மட்டுமே நம்பி ஒரு நிலப்பகுதியை வாங்குவது நல்ல விசயம் அல்ல.


விவசாய நிலத்தை மட்டுமல்லாது, உற்பத்தி/தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றவும் டீ.டி.சி.பி. அனுமதி தேவை. சான்றாக, தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்ற திட்டமிட்டால் அதற்கு, நிலத்தின் வரைப்படம் (TOPO Plan), நிலப்பத்திரங்கள் அனைத்தையும் சேர்த்து டீ.டி.சி.பி. அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர, குடியிருப்பு பகுதியாக மாற்றிய பிறகு, அந்த நிலத்தை எந்த விசயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிவித்து விட வேண்டும்.


டீ.டி.சி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆராய்வார்கள். பிறகு, இந்த நிலத்தைப் பற்றிய தகவல்களையும், அதற்கு ஆட்சேபணைகளையும் கேட்டறிய 2 நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடுவார்கள். எந்த ஆட்சேபணையும் வரவில்லை என்றால், உடனடியாக Zone Conversion னுக்கு அனுமதி கொடுப்பார்கள்.


நான்கு மாடிக்கு மேல் கட்டப்படுகின்ற கட்டிடங்கள் அனைத்துமே அடுக்குமாடிக் கட்டிடங்களாகக் கருதப்படுகின்றன. இதில் கட்டப்படுகின்ற கட்டிடத்தின் அருகே உள்ள சாலையின் அகலம், நிலத்தின் அகலம், ஃபுளோர் சைஸ் இண்டெக்ஸ் (Floor size index), கட்டிடத்தின் அகலம் போன்ற எண்ணற்ற நடைமுறைகள் உள்ளன.


இவற்றில் ஒன்று ஒத்துவரவில்லை என்றாலும் அடுக்குமாடிக் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப்படாது. சான்றாக, 10 மாடிக் கட்டிடம் என்றால், அருகே உள்ள சாலையின் அகலம் குறைந்தபட்சம் 80 அடியும், கட்டிடம் கட்டப்படும் நிலத்தின் அகலம் 24.4 மீட்டரும் இருக்க வேண்டும். இதில் சிறிது குறைந்தாலும் பிளானுக்கு அனுமதி மறுக்கப்படும்.


நன்றி: புதிய தலைமுறை வார இதழ்

1 கருத்து: